தமிழகத்தில் தற்போது சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 717 கடைகளை மூட தமிழக முதல்- அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்களுக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கடைகள் மூடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 717 கடைகளில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உருவானது. இந்தநிலையில் அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதில் மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . எஞ்சிய பணியாளர்களை காலி பணியிடம் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள பணியாளர்கள் கையிருப்பில் இருந்தால் அப்பணியாளர்களை கிடங்கு பணிகளிலும், மாவட்ட அலுவலக பணிகளிலும் பணிநிரப்ப செய்திட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Comments are closed.