தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று உள்ளது. அவரது ஆட்சிக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. அந்தவகையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டு உள்ளது. கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் அமைச்சராக பதவியேற்றார். அதேபோல, மதுரை மேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸின் பி.விஸ்வநாதன் அமைச்சராக பதவியேற்றார். அவர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ஆளுநர், அமைச்சர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர்களும் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதன்மூலம் 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் முதன் முறையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1967ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு, தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்தன. காங்கிரஸ் கட்சி சில முறை ஆளுங்கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருந்தாலும், அமைச்சரவையில் பங்கு பெறாமல் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளித்து வந்தது. தற்போது 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் மீண்டும் நேரடியாகப் பங்கேற்றுள்ளது.

Comments are closed.