தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகிய இருவரும் போட்டியின்றி இன்று(12 05-2026) தேர்வு செய்யப்பட்டனர். மரபுப்படி, அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்று சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். சபாநாயகரை வாழ்த்தி சட்டமன்றத்தில் முதல்முறையாக முதல்வர் விஜய் பேசியதாவது:- இங்கிலாந்தில் மன்னராட்சி இருந்த காலத்திலேயே நாடாளுமன்றம் செயல்பட்டது. ஜனநாயகத்தின் இதயமாக இந்த பேரவை செயல்பட வேண்டும். மக்களே மக்களுக்காக நடத்தும் ஆட்சி மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். தவெக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக நடக்க வேண்டும். ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் அவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பேரவையில் அனைவரும் சமம். சட்டமன்ற மரபுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

Comments are closed.