சென்னை, பெரம்பூரில் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திடீர் பள்ளங்களும், தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?..* விஜய் சரமாரி கேள்வி!
வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. வேட்பாளர் நேர்காணலை முடித்துவிட்டு இன்று( மார்ச் 27) வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நாளை முதல் விஜய் பெரம்பூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முறையாக விண்ணப்பிக்காததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே (26-03-2026) த.வெ.க.சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும், தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?. அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி! எனத் தெரிவித்தார்.

Comments are closed.