கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் 6 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். அவர்களில் 4 பேர் வெற்றி பெற்றனர். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரதமர் மோடி 3 முறையல்ல, 33 முறை தமிழகத்துக்கு வந்தாலும் பாஜவை இங்கு கால் பதிக்க வைக்க முடியாது. மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும். இண்டியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் தலைமை ஏற்க வேண்டுமென மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குரல்கள் வருவது திமுகவுக்கு பெருமை. கூட்டணியில் இருப்பவர்களும் பெருமைப்படுகிறோம். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சி. தேமுதிக சேர்ந்ததும் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் கலகலத்து போயிருக்கிறார்கள்.காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, திரைப்படங்களைப் பார்த்து சில இளைஞர்களுக்கு விருப்பம் வந்திருக்கிறது. அதை பார்த்து அவர்கள் செல்கிறார்கள். ஆனால், அது தேர்தல் முடிவுகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

Comments are closed.