2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேரும், புதுவையைச் சேர்ந்த ஒருவரும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, வர்த்தகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான சாதனைகள் அல்லது சேவைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய 3 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுச்சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்கச் சாதனை புரிந்தவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் நாளை(26-01-2026) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற்றவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று( ஜன. 25) வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 6 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியை சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன், தஞ்சாவூரை சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் முனைவர் புண்ணியமூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், திருவாரூரை சேர்ந்த கர்நாடக இசை மிருதங்க கலைஞர் பக்தவச்சலம், சேலத்தை சேர்ந்த சிற்பக்கலை கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் ஆகிய 6 பேருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களை மொத்தம் 45 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் விரைவில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.

Comments are closed.