நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளது. இதனால் அவர் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரசார குழு கூட்டங்களும் நடந்தன. அதே நேரத்தில், கடந்த டிசம்பர் 18-ந்தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு பிறகு விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. ஜனநாயகன் பட விவகாரம், சிபிஐ விசாரணை போன்றவற்றால் விஜய் மவுனம் காத்து வருகிறார். இந்தநிலையில், வருகிற 25-ந்தேதி விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில், வருகிற 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.