தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்) இன்றுடன்(டிச.11) நிறைவு பெறுகின்றன. திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16ம் தேதி வெளியிடப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்கியது. ஜனவரி 24-ந்தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாவட்டங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களில் முதல் நிலை சரி பார்ப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரதிநிதிகள் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதன்படி, பிரதிநிதிகள் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் நாட்களில் காலை 8.45 மணி முதல் மாலை 7 மணிவரை எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருக்க வேண்டும். முதல் நிலை சரிபார்ப்பு பணியின் நிறைவாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது மாதிரி வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. முதல் நிலை சரிபார்ப்பு பணியின் போது, பழுதானது என கண்டறியப்படும் எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.