வங்கக்கடலில் உருவானது ‘டிட்வா’ புயல்: எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு ‘டிட்வா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும். இதன்காரணமாக இன்று (நவ.,27) புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், நாளை (நவ.,28) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும் (ரெட் அலெர்ட்), ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழையும்(ஆரஞ்சு அலெர்ட்), தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும்(மஞ்சள் அலெர்ட்) பெய்யக் கூடும். இதேபோல 30-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.