தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(19-11-2025) கோவைக்கு வருகிறார். இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வருகை தந்தாலும், அவரின் இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மோடியை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை மோடி தமிழ்நாடு வருகை தந்த போது, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சியை மேற்கொண்ட செங்கோட்டையனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்ததாக கூறியதால், இன்று பிரதமர் மோடியை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “சஸ்பென்ஸ்… பொறுத்திருந்து பாருங்கள்” என்று மட்டும் பதில் அளித்தார்.

Comments are closed.