இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தை உட்படுத்துவதற்கான அவசர வேண்டுகோள்.
1. தமிழக வெற்றிக் கழகம் (“TVK”) சார்பாக உங்கள் அவசரமான தலையீட்டை நாடி இந்த கடிதத்தை எழுதுகிறேன். வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதற்கு எங்கள் கட்சி உறுதியாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற பார்வையின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுதல் அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பின் ஒரு அங்கமாக அமைவதாக எங்கள் மரியாதையுடன் வலியுறுத்துகிறோம்.
2. இந்தியத் தேர்தல் முறையில் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதாக உங்கள் அலுவலகத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கூட்டங்களில் இருந்து விலக்கப்படுவது, தேர்தல் முறையின் நியாயத் தன்மையில் பொதுமக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்த அத்தியாவசியமான சமமான பங்கேற்பு என்ற கோட்பாட்டை பாதிக்கிறது.
3. மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகம் தேர்தல் தயாரிப்பு செயல்முறைகளைக் குறித்துக் கூட்டங்களை நடத்தியபோது, அவற்றில்
த.வெ.க. சேர்க்கப்படாதது, தேர்தல் செயல்முறைகளின் கண்காணிப்பில் ஒரு முக்கியமான வாக்காளர் பகுதியை பங்கேற்பிலிருந்து விலக்குகின்ற விளைவுகளை உருவாக்குகிறது என்பதை மேலும் சமர்ப்பிக்கிறோம்.
4. வெளிப்படைத் தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறைகளின் உயர்ந்த தரத்தைக் காக்கும் நோக்கத்தில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் த.வெ.க.வுக்கு தக்க அறிவிப்பு வழங்கி, அவற்றில் பங்கேற்க அழைக்க வேண்டுமென மிகுந்த தாழ்மையுடன் கோருகிறோம்.
5. எனவே, இந்த தேர்தல் முறையை மேம்படுத்தும் பொது நோக்கில் எவருக்கும் பாதகமில்லாத இந்த நியாயமான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும்படி, இந்திய அரசியல் சட்டத்தின் 324ம் கட்டளையின் கீழுள்ள உங்களது மேற்பார்வை அதிகாரத்தின் படி, தமிழக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு, அல்லது எங்களது மனுவை அவர்களிடம் கொண்டு செல்லுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களில் எங்கள் கட்சி முறையாக சேர்க்கப்படுவதை இது உறுதி செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.