மோந்தா புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகியவை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது இன்று(அக்.27) தீவிர புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. நாளை மாலை அல்லது இரவில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப் பட்டு உள்ளது. புயல் காரணமாக தமிழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்துத்துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏரி, குளம், கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காணொலி வாயிலாக மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். குறிப்பாக புயல் மழையின்போது மின்சாரம், தொலைத்தொடர்பு, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது தொடர்பாக அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

Comments are closed.