தமிழகத்தில் 2025- 2026-ம் கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றது. பின்னர் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி போன்ற பண்டிகைகளை கொண்டாடி மகிழ்ந்தனர். காலாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் முட்செடிகளை அகற்றினர். மேலும் பள்ளிக்கூடத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.

Comments are closed.