Rock Fort Times
Online News

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்…!

தேர்தல் வாக்குறுதி படி அனைவருக்கும் பழைய பென்ஷன் வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். 23 மாத நிலுவையில் உள்ள ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த உயர்வு, குறைந்தபட்ச பென்சன் உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும்
என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் திருச்சி, கரூர் மண்டலங்கள் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி புறநகர் கிளை முன்பு இன்று( ஜூலை 22) தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு டி.என்.எஸ்.டி.சி திருச்சி, கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி டி.என்.எஸ்.டி.சி திருச்சி, கரூர் மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், எஸ்.சி.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் ராமதாஸ், சண்முகம், ஜெயராமன், டி.என்.எஸ்.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, சீனிவாசன், சிவானந்தம் ஆகியோர் பேசினர். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் நிறைவுறையாற்றினார். முடிவில் டிஎன்எஸ்டிசி துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்