திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து அவரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரை வீட்டில் விட்டு சென்றுவிட்டனர். இந்த கடத்தல் தொடர்பான புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கே.வி குப்பம் எம்.எல்.ஏ. ‘பூவை’ ஜெகன்மூர்த்தி காவல் அதிகாரி ஜெயராமன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் விசாரிக்க முடிவு செய்தனா். இதற்கிடையே ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் ஜெகன் மூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீனுக்காக மனுதாக்கல் செய்தார்.இதனையடுத்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த சூழலில் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி பூவைஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு மீது இன்று (ஜூன் -26) விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Comments are closed.