Rock Fort Times
Online News

திருச்சி ஐஓபி மண்டல அலுவலக முன்புற கேட்டுகளை விவசாயிகள் இழுத்து மூடி பூட்டு போட்டதால் பரபரப்பு- * வாடிக்கையாளர்கள் தவிப்பு (வீடியோ இணைப்பு)

வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் வீணாக கலக்கும் காவிரி வெள்ளநீரை அய்யாற்றுடன் இணைத்தால் 5 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலம் நஞ்சை நிலமாக மாறும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்கோவில் தலித் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட டிராக்டருக்கு கடந்த 4 ஆண்டுகளாக மானியம் வழங்காததால் அவர்களது டிராக்டர்கள் ஜப்தி செய்யப்படுகிறது. ஆகவே, அவர்களது டிராக்டர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பன உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயி சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இன்று (ஜூன் 23) 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு வங்கியின் இருபுறம் அமைந்துள்ள இரண்டு நுழைவு கேட்டுகளையும் இழுத்து மூடி பூட்டு போட்டு பூட்டினர். பின்னர், வங்கியின் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் முன்புற கேட்டு பூட்டப்பட்டு இருந்ததால் பெரிதும் சிரமப்பட்டனர். வங்கி வளாகத்தில் மேலும் 5 நிறுவனங்கள் செயல்பட்டதால் அவர்களும் வெயிலில் நீண்ட நேரம் காத்து நின்று கேட்டை திறந்து விடுமாறு குரல் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வங்கி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எதுவாக இருந்தாலும் உங்கள் கோரிக்கை குறித்து வங்கி அதிகாரியிடம் மனு கொடுங்கள். இதுபோன்று கேட்டை இழுத்து பூட்டி வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்