Rock Fort Times
Online News

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்கப்படுமா? வைகோ போட்டியா? – துரை வைகோ எம்பி பேட்டி…!

மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோ இன்று(21-06-2025) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் நாளை ஈரோட்டில் நடைபெறுகிறது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தாண்டு மதிமுக மாநாடு நடத்த உள்ளோம். பட்டம், பதவிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்கள் மதிமுகவினர். நான் மத்திய அமைச்சராகும் சூழல் தற்போது இல்லை. எதிர்காலம் குறித்து தற்போது கூற முடியாது. திமுக தலைமையிலான கூட்டணியில் 8-வது ஆண்டில் இருக்கிறோம். மத வாதத்தை எதிர்க்கும் அணியில் இருக்கிறோம். கூட்டணியில் எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பொது நோக்கோடு நாங்கள் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தேர்தலில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். அந்த அங்கீகாரம் பெற வேண்டும், கூடுதல் எண்ணிக்கை கேட்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இருக்கிறது. எத்தனை தொகுதிகள் கேட்க போகிறோம் என்பது குறித்து தலைமை தான் முடிவெடுக்கும். தேர்தலில் கேட்கும் தொகுதி கிடைக்கவில்லையென்றால் கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம். அதே நேரத்தில் சுயமரியாதையை எதிர்பார்ப்போம். திமுக கூட்டணியில் விரிசல் விழாதா? என்கிற எதிர்ப்பார்ப்பில் தான் எதிர்க்கட்சிகள் இருப்பார்கள். நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறும் எந்த சூழலும் இல்லை. முருகனை நான் கோவிலுக்கு சென்று வழிபடுவேன்.அரசியலில் மதத்தை கலப்பதை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். ஆளுநர், அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் .க்கு ஆதரவாக செயல்படுகிறார். மது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. ஆட்சியில் பங்கு என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அது பல குழப்பங்களை தான் உண்டாக்கும். மூன்றாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறும் பாஜகவினர் ஆங்கிலம் ஏன் கற்று கொள்ள கூடாது என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் உலகம் முழுவதும் பணிக்கு செல்வதற்கு இரு மொழி கொள்கையும் ஆங்கிலம் கற்றது தான் காரணம். ஆங்கிலம் இல்லாத இந்தியா என அமித்ஷா கூறுவது பிற்போக்கு தனமானது. வைகோவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். அது குறித்து அவர் தான் முடிவெடுப்பார் என்றார். பேட்டியின்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொக்கையா, மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, வடக்கு மாவட்ட செயலாளர் டிடிசி சேரன், தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்