வால்பாறையில் பெருந்துயரம்: சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி உயிரிழந்தது… * காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு!
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதற்காக குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று( ஜூன் 20) மாலை நுழைந்த சிறுத்தை புலி ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த, அவர்களது 5 வயது மகள் ரோஸ்லிகுமாரியை கவ்விச் சென்றது. சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் வனப்பகுதிக்குள் சிறுமியை சிறுத்தை புலி இழுத்து சென்றது. தொடர்ந்து சிறுமியை தேடிய போது சிறிது தூரத்தில் சிறுமி அணிந்திருந்த ஆடைகள் மட்டும் கிடந்தது. ஆனால், சிறுமியை மட்டும் காணவில்லை. சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை வனத்துறையினர் சடலமாக மீட்டனர். சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றுவிட்டது தெரிய வந்தது. சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Comments are closed.