கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கா?* அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று, பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பின்னர் அதற்கு இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இருந்தாலும் பல நாடுகள் பொருளாதார இழப்பை சந்தித்தன. இந்தநிலையில், தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 7,264 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 220 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கு உத்தரவு (லாக் டவுன்) அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், அது போன்ற ஊரடங்கு உத்தரவு எதுவும் தற்போது அமல்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். இதன் உண்மைத்தன்மை குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிறன்று பொதுமுடக்கம் அறிவிப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியனின் பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. “இது பழைய காணொளியே. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்திபோல் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
தவறான தகவலை பரப்பாதீர் என தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “இது வீரியமற்ற கொரோனா என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது. அதேநேரம் வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது என தெரிவித்தார்.
Comments are closed.