திருச்சி, பொன்மலை “ஜி” கார்னரில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக 51 ம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா ஓபிஎஸ் சார்பில் வரும் 24ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் ஜி கார்னர் முழுவதும் அதிமுக பெயர் பதித்த பிளக்ஸ் பேனர்கள், அதிமுகவின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடி கட்டப்பட்டுள்ளது. விழவில் அதிகாரபூர்வ அதிமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்தும் ஓபிஎஸ் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக முன்னாள் எம்பி ப.குமார் தலைமையில், திருச்சி மாநகர உதவி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னாள் எம்பி முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி, N.R. சிவபதி, பூனாட்சி மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப.குமார், அதிமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஓபிஎஸ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவிற்கு தொடர்பு இல்லாத இவர்கள் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் ஓபிஎஸ் உள்ளிட்டோர், பொது மக்களையும் அதிமுகவினரையும் குழப்பும் வகையிலும், திசை திருப்பும் வகையிலும், குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி அரசியல் செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். எனவே அதிமுகவிற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஓபிஎஸ் உள்ளிட்டோர் இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 2000 ஆகியவற்றின்படி வழக்குப்பதிந்து இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

