Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் கல்லூரி தொடங்கப்படும்- பள்ளி கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு…!(வீடியோ இணைப்பு)

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்தி நகரில் செயல்படும் மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கு ரூ.18.41 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிய பள்ளி கட்டிடத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று(04-06-2025) திறந்து வைத்தனர். பின்னர், மாணவர்களுக்கு சீருடைகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், மேற்கு தொகுதியில் அரசு பள்ளிகளே இல்லை, மாநகராட்சி பள்ளி தான் உள்ளது. எனவே தமிழக முதல்வரை அழைத்து வந்து திருவெறும்பூர் தொகுதியில் மாதிரி பள்ளியை திறந்ததைப் போன்று மேற்கு தொகுதியிலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு பள்ளியை திறக்க வேண்டும். திமுக ஆட்சியில் தான் திருச்சி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றுள்ளது. திருச்சியில் மாநகராட்சி சார்பில் 5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி கல்லூரி தொடங்கப்படும். உறையூரிலும் இதே போன்ற பள்ளி தொடங்கப்படும் என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், இந்த பள்ளி கட்டிடம் தனியார் பள்ளியா? கல்லூரியா? என வியக்கும் அளவிற்கு உள்ளது. கழகத்தையும், பொதுவாழ்வையும் தனது இரு கண்களாக பார்ப்பவர் அமைச்சர் நேரு என்பதற்கு சாட்சியாக இந்த பள்ளி உள்ளது. பதவிகள் வரும் போகும். ஆனால் வாழ்நாள் முழுவதும் நம்முடன் வருவது நாம் கற்ற கல்விதான். உயர்நிலைப் பள்ளியாக இருக்கக்கூடிய இந்த பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். பெரம்பலூர் எம்பி அருண்நேரு பேசுகையில், கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, கோட்டத் தலைவர்கள் மு.மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், 57-வது வார்டு கவுன்சிலர் முத்துசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாக துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜூன் 12ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்த பின்பு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் அந்த துறை சார்பில் எடுக்கப்பட்டு உள்ளது. மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வந்தது.அதனால் அவர் பேசியது சரிதான். திமுக அரசு மீது எந்த குறையும் கூற முடியாததால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின்பும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறை கூறுகிறார் என்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாத கொரோனா . இதனால் எந்த பாதிப்பும் இல்லை. கொரோனா பரவல் தொடர்பாக தேவை ஏற்பட்டால் பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தப்படுவார்கள் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்