பக்ரீத் மற்றும் சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு…!
சுபமுகூர்த்தம், பக்ரீத் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுப முகூர்த்த நாட்களான 05-06-2025 (வியாழக்கிழமை), 06-06-2025 (வெள்ளிக்கிழமை), 07-06-2025 (சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை மற்றும் 08-06-2025 (ஞாயிற்றுக்கிழமை) நாட்களை கருத்தில் கொண்டும், பயணிகளின் நலன் கருதியும் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும்
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 520 பேருந்துகளும், சனிக்கிழமை 550 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.