திருச்சி, துவாக்குடியில் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! * 5 அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்பு
திருச்சி, பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று( மே 8 )சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக துவாக்குடி வந்து அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளை திறந்து வைத்தார்.
கடந்த 2021ம் ஆண்டு, மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் மாதம் 2 ம் தேதி 10 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் திறப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்தவகையில் திருச்சி, செந்தண்ணீர் புரத்தில் மாநகராட்சி மாதிரி உயர் நிலைப்பள்ளியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு எடுக்கப்பட்டு 3.20 ஹெக்டேர் நிலத்தில் ரூ. 56.47 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் 22 வகுப்பறைகள். வேதியியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், நூலகம், பல்நோக்கு அறை, உயிரியல் ஆய்வகம், இயற்பியல் ஆய்வகம், முதல் உதவி மற்றும் விளையாட்டு அறை , தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அறைகள் , அலுவலக அறை, பெண்கள் மற்றும் ஆண்கள் ஓய்வறை, பெண்கள் மற்றும் ஆண்கள் மாற்றுத்திறனாளி அறைகள் , ஆர். ஓ குடிநீர் வசதிகள், 50,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 தரைதள தண்ணீர் தொட்டிகள், உயர் மட்ட விளக்கு போன்ற வசதிகளுடன் மாதிரி பள்ளி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் மாதிரி பள்ளியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, சிவசங்கர், மெய்யநாதன், எம்பிக்கள் திருச்சி சிவா, கே.என் அருண்நேரு, துரை வைகோ, எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, கதிரவன், சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், அப்துல்சமது, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.