Rock Fort Times
Online News

வியாபாரிகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்… வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நேற்று ( மே 5) நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வி. கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். வியாபாரிகள் மீதான புகையிலை, குட்கா வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:-
விக்கிரமராஜா, வியாபாரிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஓடோடி வந்து நிற்பார். உடனே அந்த பிரச்சினையை எனது கவனத்துக்கு கொண்டு வருவார். எப்படிப்பட்ட பிரச்சினை என்றாலும் அழுத்தம் கொடுத்து அதனை நிறைவேற்றக்கூடிய ஆற்றலை பெற்றவர். வியாபாரிகள், ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு வருகிறேன். இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழை தந்தபோது, மே 5-ந் தேதியை வணிக நாளாக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து இந்த கோரிக்கையை அவர் வைத்து வருகிறார். விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும். வியாபாரிகளுக்கு உறுதுணையாக திராவிட மாடல் அரசு எப்போதும் இருக்கும். திராவிட இயக்கம் என்ற ஒன்று இருக்கிற வரை வணிகர்களின் நலனை காக்கிற அரசாகவும், இயக்கமாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மூர்த்தி, தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை செயலாளர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், செயலாளர் வி.பி.ஆறுமுகப்பெருமான், மாநிலத் துணைத் தலைவர்கள் ரங்கவிலாஸ் ரங்கநாதன், கே.எம்.எஸ்.ஹக்கீம், மாநில இணை செயலாளர்கள் டி.ராஜாங்கம், எம்கோம் மாங்காய் மண்டி எம்.காதர் மைதீன், எம்.தீபக்ராஜா, தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் எஸ்.கந்தன், டோல்கேட் சுப்பிரமணி, திருப்பதி ஸ்டில்ஸ் எம்.திருப்பதி, கே.ஜே.சுகந்திராஜா, இளைஞர் அணி மாநகர செயலாளர் ப.திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்