திருவெறும்பூர், நவல்பட்டு அருகே காட்டாற்றினை ரூ.35 லட்சத்தில் தூர் வாரும் பணி…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பாசன அமைப்புகள் மற்றும் பாசன ஆதாரங்களாக விளங்கும் வாய்க்கால்கள் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தூர்வார அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 115 பணிகள் 343.14 கி.மீ. நீளத்திற்கு ரூ.16.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து18 ஆயிரத்து 258 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்தத் திட்டத்தின் கீழ் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் புது குளத்தில் இருந்து பிரியும் காட்டாறு கும்பக்குடி, நற்கடல் குடி, சோழமாதேவி வரை வந்து அதற்குப் பிறகு உய்ய கொண்டான் ஆற்றில் கலக்கிறது. அந்த காட்டாறை குண்டூர்-நவல்பட்டு 100 அடி சாலையின் கீழ்புறம் நெடுக்கை 9200 மீட்டர் முதல் 11200 மீ.வரை தூர்வாரம் பணி நடைபெறுகிறது. தூர்வாரம் பணியினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த தூர் வாரும் பணி மொத்தம் ரூ.35 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் மேனகா, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், திமுக நிர்வாகி கயல்விழி, மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Comments are closed.