திருச்சியில் ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல் – 3 பேர் கைது… * சப்ளை செய்த மருந்து கடை உரிமையாளரும் சிக்கினார்
திருச்சி, பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முதலியார் சத்திரம் குட்செட் ரோடு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ( வயது 25), பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் ( 22 ), அதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி ( 50 ) என்பதும், அவர்கள் போதை மாத்திரை விற்றதும் தெரிய வந்தது. அவர்களது மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது 5,500 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று துருவி, துருவி விசாரணை செய்ததில், திருச்சி குண்டூரை சேர்ந்த மருந்து கடையிலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து குண்டூர் எம்.ஐ.இ.டி. பகுதியில் மருந்து கடை நடத்திவரும் கோதண்டபாணி (33) என்பவரை கைது செய்தனர் .அவர் மருந்து கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 7000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. ஆக மொத்தம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த மாத்திரைகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. ஆனால் கோதண்டபாணி மருந்து சீட்டு இல்லாமல் இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினர்.
Comments are closed.