ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடக்கும் திருவிழாக்களுள் முக்கியத்துவம் வாய்ந்தது தெப்பத் திருவிழா. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா இன்று(02-03-2025) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி இன்று காலை 9.15 மணியளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது. முகூர்த்தகாலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்த காலை கோவில் இணைஆணையர் மாரியப்பன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது யானைகள் துதிக்கையை மேலே தூக்கி ஆசீர்வதித்தன. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 3-ந்தேதி மாலை ஹனுமந்த வாகனத்திலும், 4-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 5-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 6-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 7-ந்தேதி யானை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி உள்திருவீதிகளில் வலம் வருகிறார். திருவிழாவின் 7-ம்நாளான
8-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சென்றடைகிறார்.

முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8ம்நாளான 9-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். 9ம்திருநாளான 10-ந்தேதி காலை 7மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed.