Rock Fort Times
Online News

திருவெறும்பூர் அருகே பெயிண்டர் சரமாரியாக வெட்டிக்கொலை- கள்ளக்காதல் விவகாரமா? போலீசார் விசாரணை…(வீடியோ இணைப்பு)

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் பிரபாகரன் (வயது 39). பெயிண்டர். இவர் இன்று(04-02-2025) அதிகாலை வேங்கூர் ராக்கப்ப பெருமாள் கோவில் அருகே தனது இருசக்கர வாகனத்தின் மீது தலை, நெஞ்சு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்ற சில பெண்கள் இதனை பார்த்து பதறியதோடு இதுகுறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கொலை குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் பிரபாகரன், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இருந்தாலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த கொலையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்