ஸ்டாலின் அரசு அண்ணா, கருணாநிதி வழியில் நடக்கவில்லை, வேறு யாரோ இயக்குகிறார்கள்- திருச்சியில் அர்ஜுன் சம்பத் …!
இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமண ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கம் ஸ்ரீரங்கத்தில் இன்று(08-12-2024) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கஸ்தூரி பேச்சை திரித்து வெளியிட்டு அவரை தீவிரவாதி போல் கைது செய்தார்கள். பிராமணர்களுக்கு ஆதரவாக பேசினாலே இது தான் நடக்கும் என்பதற்கு கஸ்தூரி கைது ஒரு உதாரணம். ஈசா மையத்திற்கு ஆதரவாக பேசிய ஓம் கார் பாலாஜி கைது செய்யப்பட்டார், அவர் அவமானப்படுத்தப்பட்டார். இசைவாணி என்கிற பாடகி ஐயப்ப பக்தர்களை புண்படுத்தும் வகையில் பாடல் பாடினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவரை கைது செய்யாதது ஏன்? . கனிமொழி குறித்தான கருத்துக்கு எதிராக ஹெச்.ராஜாவிற்கு தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிராமணர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக காவல் துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை, திராவிட சித்தாந்தங்கள் பேசுபவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி மதுரையில் பிராமண சமூகத்துடன் இணைந்து அடையாள உண்ணாவிரதம் இருக்க போகிறோம். நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி அல்ல, எங்களுக்கு நீதி வேண்டும் என்கிற போராட்டம் தான். இதுகுறித்து பேச முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஸ்டாலின் அரசு அண்ணா, கருணாநிதி வழியில் நடக்கவில்லை பெரியார் வழியில் தான் செயல்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியை வேறு யாரோ இயக்குகிறார்கள்.ஒவ்வொரு மாவட்டத்திலும் சனாதான ஆதரவு வழக்கறிஞர்கள் குழு உருவாக்கப்படும். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் குறித்து பேசப்படவில்லை. திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்குள் பா.ஜ.க வந்து விட கூடாது என எடுக்கும் நடவடிக்கை தான். தி.மு.க ஆட்சி முகலாயர் காலத்தில் இருந்தது போல் மன்னராட்சி போல் தான் நடந்து வருகிறது என்றார்.
Comments are closed.