Rock Fort Times
Online News

திருச்சி கோட்டை, காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் கஞ்சா, மதுபோதையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் – திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் கடும் நடவடிக்கை எடுப்பாரா ? ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாநகர பகுதிகளில் இதயம் போன்றது, கோட்டை பகுதியாகும். இங்குதான் பிரபல ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திர கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என ஏராளமான கடைகள் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தை பிடிப்பது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி. இந்த இரண்டு பகுதிகளுக்கும் நாள் ஒன்றுக்கு ஏராளமான மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 -வது வார்டு காந்தி மார்க்கெட் பகுதியில் பெரிய கம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு, ராணி தெரு, கள்ளத்தெரு போன்ற தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வளையல், ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்கும் கடைகள் நடத்தி வருகின்றனர். மேற்கண்ட தெருக்கள் மற்றும் கோட்டை பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் சிலர் கஞ்சா, போதை மாத்திரை உட்கொண்டும், சிலர் மது போதையில் தெரு வழியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல், அடித்து ரத்த காயம் ஏற்படுத்துதல், மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், உயிருக்கு பயந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிலர் தங்களிடம் உள்ள பணம் மற்றும் பொருட்களை அவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.

மேலும், அங்குள்ள வடநாட்டு பெண்கள் மற்றும் பொருட்கள் வாங்க அந்தப் பகுதிக்கு வரும் பெண்களிடம் கஞ்சா போதையில் வம்பு செய்கிறார்கள். இது ஒரு நாள், இரண்டு நாள் நடப்பது அல்ல. தினந்தோறும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கு உதாரணமாக காந்தி மார்க்கெட் அருகே உள்ள பெரிய கம்மாளதெரு, ராணி தெரு பகுதியில் நடந்து வரும் ஒருவரிடம் மூன்று பேர் கொண்ட கும்பல் ரவுசு செய்வதும், அவரை கத்தியை காட்டி மிரட்டும் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் கோட்டை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் விற்கப்படும் கஞ்சா மற்றும் போதை ஊசி, போதை மாத்திரை கும்பலே ஆகும். இதுகுறித்து காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளித்தும் பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, இதுபோன்ற போதை கும்பலிடம் இருந்து பொதுமக்களை காக்க, திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேற்கண்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரபடுத்த அறிவுறுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்