ரூ.66 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வாங்கி மோசடி- பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குபதிவு…!
திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பிரணவ் ஜுவல்லரி கிளைகள் இயங்கி வந்தன. இதன் இயக்குனர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்த நிறுவனம் நகை சேமிப்பு திட்டம் மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் முதலீடாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் திருச்சி மற்றும் மதுரையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மதன் மற்றும் கார்த்திகா மீது வழக்கு பதிவு செய்து மதனை கைது செய்தனர். இந்தநிலையில் மகாராஷ்டிரா ராணி அகல் கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரதீம் பிகாஸ் ஹஜ்ரா என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் மற்றும் திருச்சி- கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள அந்த ஜுவல்லரி கிளையின் மேலாளர் நாராயணன் ஆகியோர் கடந்த 2023 ம் ஆண்டு 1,279.870 கிராம் தங்கத்தை தன்னிடம் கொள்முதல் செய்தனர். அதற்கு ரூ.6 லட்சம் மட்டுமே பணம் கொடுத்தனர். மீதமுள்ள ரூ.66 லட்சத்து 64 ஆயிரத்து 559 பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவின்படி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செழியன், நகை கடை அதிபர் மதன் மற்றும் கிளை மேலாளர் நாராயணன் ஆகிய இரண்டு பேர் மீதும் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.