திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.75 லட்சம் பறிமுதல் ! ஹவாலா பணமா? வருமான வரித்துறையினர் விசாரணை! ( வீடியோ இணைப்பு )
தமிழ்நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்வே போலீஸார் பயணிகளை பரிசோதனை செய்வது வழக்கம். இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று ( டிசம்பர் 7ம் தேதி ) அதிகாலை 2.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுராவிலிருந்து திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியதாஸ் என்பவர் கருப்பு நிற தோல் பையில், கட்டு கட்டாக பணம் வைத்திருப்பது சோதனையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் அவரிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகு அவர் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை ரயிலில் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் வருமானவரித்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருமானவரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதா தலைமையிலான குழுவினர் இது குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் திருச்சி ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.