தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கி 20ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 12,639 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் எழுதுகிறார்கள். தமிழகத்தில் இதற்காக 3976 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன . இதில்180 தனியார் பள்ளி மையங்களும் அடங்கும். புதுச்சேரியில் 287 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத 49 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர். அறையில் கண்காணிப்பு பணியில் மட்டும் 46 ஆயிரத்து 870 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களில் செல்போன், கணினி, கால்குலேட்டர் போன்றவை எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மேலும் மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து உள்ளது. கல்வி துறை அதிகாரிகள் மாவட்ட வாரியாக, மாவட்டங்கள் தோறும் சென்று தேர்வு பணியினை ஆய்வு செய்கிறார்கள். மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு நேரங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். 94983 83081, 94983 83075 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்க தொடர்புகொள்ளலாம்.
