Rock Fort Times
Online News

அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா சூட்ட முடியும்- துறையூர் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…!

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வருகை தந்து திறந்து வைத்தார். முன்னதாக கலைஞர் நூலகம், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி அருண்நேரு அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர், விழா மேடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- திருச்சியிலிருந்து துறையூருக்கு ஒரு மணி நேரத்தில் வந்து விட முடியும். வழிநெடுக தொண்டர்கள் அளித்த வரவேற்பு, பொதுமக்களின் வாழ்த்துக்களை பெற்று வந்ததால் 3 மணி நேரம் தாமதமாகிவிட்டது. இந்த தொகுதிக்கு பலமுறை வந்துள்ளேன். துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உங்கள் வாழ்த்துக்களை பெற வந்துள்ளேன். ஒவ்வொரு தொகுதியிலும் கருணாநிதி சிலை நிறுவவேண்டும், இளைஞரணியினர் கலைஞர் நூலகம் திறக்கவேண்டும் என்ற தமிழக முதல்வர் உத்தரவின்படி துறையூர் தொகுதியில் கருணாநிதி சிலையும், கலைஞர் நூலகமும் திறக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா சிலைக்கு அருகே கருணாநிதி சிலையையும் வைத்திருப்பது பெருமை. அதற்காக அனைவரையும் பாராட்டுகிறேன். தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலையை திறக்கிறோம் என்றால் அவரது கொள்கையை, லட்சியத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம் என்று அர்த்தம். கருணாநிதி பெயரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பல்நோக்கு மருத்துவமனை, நூலகம், விளையட்டரங்கம் இன்னும் பல திட்டங்களை அவர் பெயரில் அறிவிக்கிறோம்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது எதற்கெடுத்தாலும் கருணாநிதி பெயர் வைக்கிறார்கள் என்கிறார். கருணாநிதி பெயர் வைக்காமல் கரப்பான் பூச்சி பெயரையா வைக்க முடியும். நான் கரப்பான்பூச்சி என யாரை சொல்கிறேன் என உங்களுக்குத் தெரியும். அதேபோல் உதயநிதிக்கு எதற்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தீர்கள். அவருக்கு தகுதியே இல்லை என்கிறார். ஆமாம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற, அவர் சொல்கிற தகுதி நிச்சயமாக எனக்கு கிடையாது. நான் கூவத்தூர் போய் மேசை நாற்காலிக்குள் புகுந்து யார் காலிலும் விழுந்து அந்த பொறுப்புக்கு வரவில்லை. எத்தனை பொறுப்புகள் எனக்கிருந்தாலும், உங்கள் வீட்டுப் பிள்ளையாக கலைஞர் பேரனாக இருப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி பெருமை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும்16 மாதங்கள் தான் உள்ளது. நமது முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு சான்று போல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் நூறு சதவீதம் வெற்றிப் பெற்றோம்.

அதே போல் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்றும், குறைந்தது 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதிமுக பொருளாளர் திண்டுகல் சீனிவாசன் அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அதிமுக கூட்டணியுடன் வாருங்கள் என்றால் ஒருத்தன் நூறு கோடி கேட்கிறான். ஒருத்தன் 20 தொகுதி கேட்கிறான் என்கிறார். இந்த மாதிரி கேவலமான நிலைமை வேறு எந்த கட்சிக்காகவது வந்து இருக்கிறதா? . நம்ம கூட்டணி வெற்றிக் கூட்டணி. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 7 முறையும், அதாவது நமது முதலமைச்சர் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.எனவே, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி முக்கியம். அதற்கு திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும். 2026 தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைக்கும். நமது தலைவர் தான் முதலமைச்சர் என்று கலைஞர், அண்ணா சிலைகள் முன்பு நாம் அத்தனை பேரும் உறுதி எடுக்க வேண்டும். தேர்தல் பணிகளை இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கோவி செழியன்,பெரம்பலூர் , நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்