பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், வருகிற ஜனவரி 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, மாணவர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர். அரசு பேருந்துகளை பொறுத்தவரை வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பு தான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும். தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகையை யொட்டி சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பண்டிகை கால நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்தனர்.

Comments are closed.