திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாகவும், அதனை வாலிபர்கள் சிலர் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் பாலக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெல்ஸ் கிரவுண்ட் ரெயில்வே குடியிருப்பு அருகில் நான்கு வாலிபர்கள் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். போலீசார் ரோந்து வருவதை கண்டதும் அந்த வாலிபர்கள் நைசாக அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த நான்கு வாலிபர்களும் போதையில் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பாலக்கரை கூனிபஜார் பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 24), விக்ரம் (24), ஜோசப் ஸ்டீபன் ( 23) மற்றும் பீமநகர் பகுதியை சேர்ந்த கிருஸ்டன் ( 19)என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் போதை மாத்திரை பயன்படுத்தி இருந்ததும், போதை மாத்திரைகளை வாங்கி விற்று வந்ததும் தெரிய வந்தது. அதன் பேரில், அவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Comments are closed.