திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு 25ம் ஆண்டு பாஸ்கா ஒளி, ஒலி நிகழ்ச்சி நடந்தது.கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கோட்பாடான அன்பு, தாழ்மை, மன்னிப்பு இவற்றை இயேசுநாதர் தனது சீடர்களுக்கு உணர்த்தியகாலம் இந்த ஈஸ்டர் புனிதகாலமாகும். சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இயேசுபிரான் மனிதராகப் பிறந்து, மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொண்ட நாளை புனிதவெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. தவக்கால திருவிழாவின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக அனுசரித்து அன்றைய தினம் சிலுவைப்பாதை நிகழ்வுகள் ஒவ்வொரு கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடைபெறுகிறது. அந்த வகையில் திருச்சி பொன்மலையில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில் நேற்று இரவு தொடர்ந்து 25வது ஆண்டாக இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதைகளை விளக்கும் பாஸ்கா ஒளி, ஒலி நாடக நிகழ்ச்சி தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பூவுலக மக்களுக்காக பிறந்த இயேசுநாதர் யூதர்களால் பொய்குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் வீதிகளில் சிலுவையினை சுமந்துச் சென்று பின்னர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.இந்த நிகழ்ச்சி திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டார். இந்த பாஸ்கா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொன்மலை சூசையப்பர் தேவாலய இளையோர் இயக்கத்தினர் செய்திருந்தனர். இதில் திருச்சி மற்றும் சுற்று வட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

