தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது படங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், தான் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாகவும், அரசியலில் இறங்கப் போவதாகவும் விஜய் அறிவித்தார். அதன்படி,
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடப் போவதில்லை என்றும், நமது இலக்கு 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் என்றும் அறிவித்தார். தற்போது நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை இன்று (22-08-2024)அறிமுகம் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்தார். அதன்படி, பனையூரில் இருக்கும் விஜய்யின் த.வெ.க கட்சி அலுவலகத்தில் அவரது கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இவ்விழாவில் பேசிய விஜய் உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சியின் கொடியை கம்பத்தில் ஏற்றினார். வழக்கமாக, எந்த அரசியல் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினாலும் அதற்கு பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும். அந்தவகையில், விஜய்யின் த.வெ.க.கட்சி கொடிக்கு பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர் அறிமுகப்படுத்தியுள்ள கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும், அந்த மஞ்சள் நிறத்தில் வாகை மலரும் வாகை மலருக்கு இருபுறமும் யானை பீறிட்டு நிற்பது போலவும் இடம் பெற்றுள்ளன. வாகை மலரை சுற்றி இருக்கும் வளையத்தில் நட்சத்திரங்களும் இடம் பெற்றிருக்கிறது. யானையை அனைவரும் வலுவான மிருகமாக பார்க்கிறோம். அதன்படி, இந்த கட்சி கொடியில் இருக்கும் யானைக்கு அர்த்தம் வலுவானது என்று கூறப்படுகிறது. மேலும், அவைகளுக்கு நடுவே இருப்பது ‘வாகை மலர்’ ஆகும். இந்த மலருக்கு இன்னொரு அர்த்தம் ‘வெற்றி’ என்பதுதான். அது மட்டுமன்றி, பூக்கள் மிகவும் மிருதுவானவை, அதனை பாதுகாக்க வலுவான ஒன்று அதை சுற்றி இருக்க வேண்டும். எனவே அந்த பூ அழகாக வளர அதை சுற்றி வலுவான யானைகளை பாதுகாப்பிற்கு வைத்திருப்பது கொடியின் அர்த்தமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. யானை மற்றும் வாகை மலருக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. அதாவது அனைத்தையும் ஆரத்தழுவுவது என்பதாகும். இதை தமிழக மக்களுடன் பறைசாற்று நோக்கில் விஜய் இதை இரண்டையும் தனது கொடியில் இணைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், கொடிக்கான அர்த்தத்தை நேரம் வரும்போது கூறுவதாக விஜய் தெரிவித்திருக்கிறார்.
Comments are closed.