கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மே 10-ந் தேதி பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அடுத்தடுத்து கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள். 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.