பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், சட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அந்தவகையில், சென்னை பெருங்குடி வளாகம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சீர்மிகு சட்டப்பள்ளியில் பி.ஏ.எல்.எல்.பி., பி.பி.ஏ.எல்.எல்.பி., பி.காம். எல்.எல்.பி., பி.சி.ஏ. எல்.எல்.பி. போன்ற 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் உள்ள 624 இடங்களுக்கும், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற 22 சட்டக்கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 43 சட்டப்படிப்புகளுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 667 சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கின. விண்ணப்ப பதிவை சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார் தொடங்கி வைத்தார். இந்தப் படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். கலந்தாய்வும் ஆன்லைன் வாயிலாகவே நடை பெற உள்ளது. பிளஸ்-2 அல்லது அதற்கு தகுதியான தேர்வில் மொழிப் பாடங்கள் நீங்கலாக பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப் பெண்களின் அடிப்படையிலும், இனவாரியான இடஒதுக்கீடு, சிறப்பு இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.