திருச்சி கண்டோன்மென்ட் ராஜா காலனி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 26). திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் ( 60). கார் டிரைவர்களான இருவரும் நண்பர்கள். இவர்கள் இரண்டு பேரும் ஒரு காரில் தீரன் நகர் சென்று விட்டு அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். விக்னேஸ்வரன் காரை ஓட்டினார். கருமண்டபம் டி கார்னர் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவரில் (சென்டர் மீடியன்) பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரை ஓட்டிச் சென்ற விக்னேஸ்வரன் அவரது நண்பர் பாஸ்கர் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்து நடந்த பகுதி வளைவான பகுதி என்பதால்
வேகமாக சென்றதால் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் ஹைவே போலீசார் சம்பவ இடம் வரைந்து வந்து விபத்துக்குள்ளான காரினை மீட்டு இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த கிடந்த விக்னேஸ்வரன், பாஸ்கர் ஆகியோரின் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் (பொறுப்பு)வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.