மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு வாழ்நாள் சிறை…!
திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு...
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகள் இருந்தார். கை, கால்கள் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார். இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் , அந்த பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவரது தந்தையே மகளை 2020ம் ஆண்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில் அந்த பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. 5 மாதங்கள் கழித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Comments are closed.