அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த முன்னாள் சார்பதிவாளர் மற்றும் மனைவிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…!
ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிரடி உத்தரவு...!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவர், 1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் சார்பதிவாளராக பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், மனைவி வசந்தி (65) பெயரிலும் ரூ.32 லட்சத்து 25 ஆயிரத்துக்கு சொத்துக்களை வாங்கி குவித்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், கடந்த 17.08.2001 அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகாபதியால் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சிறப்பு அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று (25.04.2024) தீர்ப்பளிக்கப்பட்டது.திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். ஜானகிராமன் தனது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Comments are closed.