திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், மருதாண்டக்குறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளாின் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் உத்தரவின் பேரில், மேற்கண்ட இடங்களில் சோமரசம்பேட்டை காவல்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது, அங்கு திருவரம்பூரை சேர்ந்த ராகுல் (20) , ஆளவந்தான்நல்லூர் பகுதியைச் சேர்ந்த பரமகுரு (எ) மனோஜ் (20) , மல்லியம்பத்து பகுதியை சேர்ந்த மதன்குமார் (20) , உறையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (21) மற்றும் ஆளவந்தான்நல்லூர் பகுதியைச் சேர்ந்த பதன்ராஜ் (17) ஆகியோர் கையில் அபாயகரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு, அங்கு கடந்து செல்பவர்களிடம் எங்களிடம் கஞ்சா வாங்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், காவல்துறையினரை கண்டதும் தப்ப முயன்ற 5 பேரையும் , காவல்துறையினர் மடக்கிப்பிடித்து, கைது செய்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இவர்கள் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன். பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நேரலையாக வீடியோ பதிவிட்டு வந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ராகுல் என்பவர் மீது கொலை வழக்கு உள்பட 2 வழக்குகளும், பரமகுரு என்பவர் மீது 4 வழக்குகளும், மதன்குமார் என்பவர் மீது 7 வழக்குகள் மற்றும் சரவணன் என்பவர் மீது ஒரு வழக்கும் என மேற்படி நபர்கள் மீது ஏற்கனவே திருச்சி மாவட்ட மற்றும் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.