Rock Fort Times
Online News

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி, தடுக்க வந்த தாய்க்கு அரிவாள் வெட்டு- வாலிபர் தற்கொலை முயற்சி….

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, கல்லூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல்( வயது 19). இவர் சிறுகனூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்தார். ஆனால், அந்தப் பெண் அவரது நடவடிக்கை பிடிக்காததால் காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்முகவேல் கல்லூரி மாணவியின் வீட்டுக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அப்போது அவரை திட்டி வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு அந்த மாணவி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல், தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் மாணவியின் தலையில் வெட்டி உள்ளார். அதனை தடுக்க முயன்ற மாணவியின் தாய்க்கும் சரமாரி வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வீட்டுக்குச் சென்ற சண்முகவேல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் சண்முகவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுகனூர் அருகே எம் .ஆர்.பாளையத்தில்  நடைபெற்ற விவசாய சங்கத் தலைவர் கொலையில் சண்முகவேல் மீது  வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்