Rock Fort Times
Online News

திருச்சியில் புகையிலை பொருட்கள் கடத்திய மற்றும் போதை மாத்திரை விற்ற 3 பேர் சிக்கினர்…!

திருச்சி, உய்ய கொண்டான் திருமலை பகுதிக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சண்முகா நகர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.அருகில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாயுமான் தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மறித்து சோதனையிட்ட போது அதில் ஹான்ஸ், விமல், கூல்லிப் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டி, பெட்டியாக கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் உய்ய கொண்டான் திருமலையைச் சேர்ந்த ஆனந்தம், சீனிவாச நகரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பது தெரியவந்தது. புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததாக அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு சந்திப்பு பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்ததாக முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த நைனா முகமது என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், முகமது முஸ்தபா என்பவரை தேடி வருகின்றனர். கைதானவரிடம் இருந்து 102 மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்