திருச்சி, ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 80). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சௌந்தரவல்லி என்ற மனைவியும், இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இதில், 2 பேர் அமெரிக்காவிலும், மற்ற 2 பேர் பெங்களூருவிலும் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், தம்பதியர் மட்டும் பூர்வீக வீட்டில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரும் பெங்களூரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் நேற்று ( 24.07.2023 ) இரவு சீனிவாசன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து சீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை ஸ்ரீரங்கம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.