Rock Fort Times
Online News

திருச்சியில் பிரபல ரவுடியை கொலை செய்த நண்பர்கள் 2 பேர் கைது- பரபரப்பு வாக்குமூலம்..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சீதேவிமங்கலத்தை சேர்ந்தவர் மாதவன் என்கின்ற மண்டை வெட்டு மாதவன் (51). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் இருந்தன. தற்போது அனைத்து கொலை வழக்குகளில் இருந்தும் விடுதலையாகி வெளியே இருந்தார். திருச்சி மாவட்டத்தின் பிரபல ரவுடியான மண்ணச்சநல்லூர் குணாவின் கூட்டாளியான இவர், சிறிய அளவிலான கட்டப்பஞ்சாயத்துகளில் மட்டும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதி தீட்ஷதர் தோப்பில் உள்ள கைலாச மண்டபம் முன்பு மாதவன் நேற்று(24-01-2024) தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்றிரவு அவரை தீட்ஷதர் தோப்பிற்கு அழைத்து வந்த மர்ம நபர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் மாதவனை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை போலீசார் மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடினர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த சங்கர், மணிகண்டன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் புதுக்கோட்டை பகுதியில் இன்று(25-01-2024) மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் சங்கர், கொலை செய்யப்பட்ட மாதவனின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. சம்பவத்தன்று திருவானைக்கோவில் பகுதியில் மாதவன், சங்கர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட, பணத் தகராறில் சங்கரும், மணிகண்டனும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் மாதவனின் தலையில் வெட்டியதோடு தலையை தனியாக துண்டித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகள் இருவரும் சமீப காலமாக கரூர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் வசித்து வந்துள்ளனர். சங்கர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது. கொலை செய்யப்பட்ட மாதவன் சமீபகாலமாக கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதில், கொடுக்கல் வாங்கலில் – சங்கருக்கும் மாதவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பின்னர் கொலையில் முடிந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்