ரூ.30 ஆயிரம் பணத்துடன் தவறவிட்ட ஹேண்ட் பேக்…- காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள் திருச்சி, துவாக்குடியில் நெகிழ்ச்சி !
கண் அசந்தால் பிட் பாக்கெட், சாலையில் நடந்து சென்றால் செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற தற்போதைய சூழலில் திருச்சி, துவாக்குடி அருகே பெண் ஒருவர் தவறவிட்ட ஹேண்ட் பேக்கை மனிதநேயத்தோடு காவல்துறையில் இளைஞர்கள் ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ,துவாக்குடி அருகே உள்ள அண்ணாவளைவு பகுதியை சேர்ந்தவர் மாலதி.இவர் அப்பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, தனது ஹேண்ட் பேக்கை எடுக்காமல் மறந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து ஞாபகம் வரவே அவர் விட்டு சென்ற கைப்பை இருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, ஹேண்ட் பேக்கை காணவில்லை. அவர் தனது ஹேண்ட் பேக்கில் 30 ஆயிரம் பணம், அரை பவுண் தங்கம், 3 ஆண்ட்ராய்டு வைத்திருந்ததால் பதறியடித்துக் கொண்டு அருகில் உள்ள துவாக்குடி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதற்கிடையே துவாக்குடியை சேர்ந்த அருண் பிரசாத் மற்றும் எட்வர்டு ஆகிய இரு இளைஞர்கள் தங்களது பைக்கில் ஒரு ஹேண்ட்பேக் இருந்ததாக கூறி துவாக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து ஹேண்ட் பேக்கை தவறவிட்ட மாலதியை காவல் நிலையத்திற்கு அழைத்த போலீசார், கைப்பையை ஒப்படைத்தனர். அதில் இவர் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்களும் பத்திரமாக இருந்ததை பார்த்த அப்பெண் தனது ஹேண்ட் பேக்கை ஒப்படைத்த இளைஞர்கள் மற்றும் போலீசருக்கு நன்றி தெரிவித்தார்.

Comments are closed.