திருச்சி, பொன்மலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சாரதி (வயது 37). இவர் கடந்த 17 ந்தேதி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொன்மலை ரெயில்வே பணி மனையில் பணியாற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த அமித் சவுகான் என்பவர், சாரதியை சந்தித்து சிலர் தனது செல்போனை பறித்துக் கொண்டதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை வழிமறித்து சாரதி அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள், ஏட்டு சாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் அங்கு வந்து அவரிடம் தகராறு செய்தனர். இந்த சம்பவத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஏட்டு சாரதியை அந்த கும்பல் தாக்கி விட்டுஅங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து பொன்மலை போலீசீல், சாரதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் ஏட்டை தாக்கியதாக திருச்சி மேல கல்கண்டார்கோட்டை சோமசுந்தரம் நகர், இரண்டாவது தெருவை சேர்ந்த தினேஸ்வரன் (வயது 26), சேவாக், லியோ, சூர்யா, ராம்பிரசாத், விஷ்ணு, கார்த்திக், சதீஷ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தினேஸ்வரனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 7 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.